இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இணையத்தளங்கள் மூலமாக நடைபெறும் மோசடி நடவடிக்கைகள், குறிப்பாக Telegram, WhatsApp போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடக குழுக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களில், மோசடியாளர்கள் பொதுமக்களை ஏமாற்றி அவர்களது வங்கிக்கணக்கு இலக்கங்கள், கடவுச்சொல் மற்றும் QR குறியீடுகள் போன்ற இரகசிய தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.
பின்னர் நிகழ்நிலை (online) வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி பல்வேறு கணக்குகளுக்குப் பணம் செலுத்தும்படி ஊக்குவித்து நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக அறியமுடிகின்றது. அண்மைக்காலமாகக் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதாகவும் கூறி, பாரிய அளவிலான நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில், இணையத்தளத்தைப் பயன்படுத்தும் போது இத்தகைய மோசடிகள் தொடர்பாக எச்சரிக்கையாக செயல்படுமாறு பொலிஸ் அறிவுறுத்தியுள்ளது.











