பருத்தித்துறை கடல் பரப்பில் எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து வந்து கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 தமிழக கடற்றொழிலாளர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.  எல்லை தாண்டிய சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடற்றொழிலாளர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் கடற்றொழிலாளர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளையும் இலங்கை கடற்படை மேற்கொண்டு வருவதால், தமிழ்நாடு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.