கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு 340,525 பரீட்சாத்திகள் விண்ணப்பித்துள்ளனர். இம்முறை நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்களும் நிறுவப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 246,521 பரீட்சாத்திகள் பாடசாலை ஊடாகவும், 94,004 பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 340,525 ஆகும்.

மேலும் நாடளாவிய ரீதியில் 2,362 பரீட்சை நிலையங்களும் நிறுவப்படவுள்ளன. உயர்தர பரீட்சைகளுடன் தொடர்புடைய சகல மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகளுக்கு இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஊடாக பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன. எனினும் இதுவரையிலும் அனுமதிப்பத்திரங்கள் கிடைக்காதவர்கள் பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்தில் அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

சிறந்த மனநிலைமையுடன் பரீட்ரசைக்குத் தயாராகுமாறு மாணவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம். விடையளிப்பதற்கு வழங்கப்படும் நேரங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை. எனவே அதற்கேற்ப பரீட்சைகளுக்கு தயாராகுமாறு மாணவர்களை அறிவுறுத்துகின்றோம். அதேபோன்று அமைதியாக பரீட்சைக்குத் தோற்றக் கூடிய சூழலை தமது பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்குமாறும் பெற்றோரிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.