அமெரிக்காவின் ஓஹியோ மாநில ஆளுநர் பதவிக்கான போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமிக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறவுள்ள ஓஹியோ மாநில ஆளுநர் தேர்தலில் ராமசாமி போட்டியிடவிருக்கிறார்.
இந்த நிலையிலேயே ராமசாமிக்கான ஆதரவு குறித்து ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ ட்ருத் சோசியல் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ட்ரம்பின் புகழாரம்
அதில் மேலும் தெரிவித்துள்ள ட்ரம்ப், “விவேக் ராமசாமி உண்மையிலேயே ஒரு சிறப்பான நபர். இளம், வலிமையான மற்றும் புத்திசாலி தேசபக்தர்.

Image Credit: ABC News
ஓஹியோ மாநிலம் எனக்கு மிகவும் பிரியமான இடம். 2016, 2020 மற்றும் 2024 ஆகிய மூன்று தேர்தல்களிலும் நான் பெரும் வெற்றி பெற்ற மாநிலம் அது. அந்த மாநிலத்தின் ஆளுநராக ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் மிகச் சிறந்த ஆளுநராக இருப்பார்.
ராமசாமி மாநிலத்தின் பொருளாதாரத்தை வளர்த்திடவும், வரிகளை குறைக்கவும், அமெரிக்க தயாரிப்பு பொருட்களை ஊக்குவிக்கவும், அமெரிக்க ஆற்றல் தன்னிறைவை உறுதிசெய்யவும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், குடியேற்ற குற்றங்களைத் தடுக்கவும், இராணுவத்தையும் முன்னாள் வீரர்களையும் பாதுகாக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்தவும், தேர்தல் நேர்மையை மேம்படுத்தவும், இரண்டாம் திருத்தச்சட்ட உரிமையை (Second Amendment) காக்கவும் கடுமையாக பாடுபடுவார்.
விவேக் ராமசாமி ஓஹியோவின் மிகச் சிறந்த ஆளுநராக இருப்பார். எனது முழுமையான ஆதரவு அவருக்கு உண்டு, அவர் உங்களை ஏமாற்றமாட்டார்.” என கூறியுள்ளார்.
ராமசாமியின் முக்கிய பலம்
ஓஹியோ மாநிலம் சமீப ஆண்டுகளில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக மாறி வரும் நிலையில், ட்ரம்பின் இந்த ஆதரவு ராமசாமிக்கு முக்கிய பலமாக கருதப்படுகிறது.

Image Credit: ABC News
இருப்பினும், சமீபத்திய கருத்துக்கணிப்பில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் முன்னாள் சுகாதாரத் துறை பணிப்பாளர் எமி ஆக்டன், சிறிய அளவில் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஆளுநர் மைக் டிவைன் பதவியிலிருந்து விலகும் நிலையில், அடுத்த ஆண்டு மே மாதத்தில் குடியரசுக் கட்சியின் முன்னுரிமைத் தேர்தலும், நவம்பரில் பொதுத் தேர்தலும் நடைபெறவிருக்கின்றன.











