மன்னாரில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 14 காற்றாலைக்கான வேலைத்திட்டங்கள் நிறுத்தப்படாது என்கின்ற விடயம் தெளிவாக அரசினால் கூறப்பட்டுள்ளது.எனவே போராட்டக்களத்தில் இருந்து நாங்கள் கூறிக்கொள்வது எமது போராட்டம் நின்று விடாதென்பதாகும் என போராட்டக்குழு இன்றைய தினம் அறிவித்துள்ளது.
எமது போராட்டத்தின் ஊடாக எமது குரலுக்குச் செவிசாய்த்த ஜனாதிபதிக்கு போராட்டக்குழு சார்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது மூன்று கோரிக்கைகளையும் அவர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என நம்பி எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடர்ச்சியாக சுழற்சி முறையில் போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை (5) 95 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்றது.
'ஜனாதிபதி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (4) மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்திருந்தார்.அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.எதிர்வரும் காலத்தில் எவ்விதமான காற்றாலை திட்டங்களும் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படாது என்கின்ற செய்தியை அமைச்சரவை ஊடாக தெரிவித்திருந்தார்.
எனினும் தற்போது அமைக்கப்படும் 14 காற்றாலைகளும் அகற்றப்பட்டு, ஏற்கனவே அமைக்கப்பட்ட காற்றாலைகளால் ஏற்படும் பாதிப்புகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அதற்கான உத்தரவாதத்தினை வழங்குவதன் மூலமும், மன்னார் மாவட்டத்தில் கணிய மணல் அகழ்வு இடம்பெறாது என்ற உத்தரவாதமும் வழங்கப்படுகின்ற போதே இப்போராட்டம் நிறுத்தப்படும்.
எமது கோரிக்கைகளான மன்னார் தீவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 14 காற்றாலைகள் அகற்றப்பட வேண்டும்,ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36 காற்றாலைகளால் மன்னார் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பாதிப்புக்களும் உடனடியாக நிவர்த்தி செய்கிற முயற்சியில் ஈடுபடுவதாக எமக்கு உத்தரவாதம் வழங்கப்படவேண்டுமெனவும் போராட்டக்குழு அறிவித்துள்ளது.











