இஸ்ரேலில் வெளிநாட்டு தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான இரசாயனம் கலந்த நீர் தாக்குதல்களில், மூன்று இலங்கை தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது சிறிய குழுக்கள் இரசாயன நீர்த்தாரை பிரயோகிக்கும் காட்சிகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், இலங்கையர்கள் மீது இரசாயன நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டமை தொடர்பில் தூதரகம் அதிகாரப்பூர்வமாக விசாரித்துள்ளது.
இந்த சம்பவங்கள் தனியாகப் பயணிக்கும் நபர்களை குறிவைத்ததாகத் காணப்படுகின்றது. தாக்கப்பட்ட மூன்று இலங்கையர்கள் பின்னர் தூதரகத்திற்கு தங்கள் அனுபவங்களைப் பற்றி தெரிவித்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து, இலங்கையர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சகம் மற்றும் சனத்தொகை மற்றும் குடிவரவு திணைக்களத்திற்கு (PIBA) இலங்கைத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தாக்குதல் தொடர்பாக முதல் முறையாக முறைப்பாடளிக்கப்பட்டமைக்கு இணங்க 13 முதல் 19 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்களை இஸ்ரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் இதேபோன்ற சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண சீசீரிவி கமராவின் காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களைப் பயன்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், குறிப்பாக வீட்டிற்கு பணம் அனுப்பும்போது குழுக்களாகப் பயணிப்பதோடு, பயணத்தின் போது மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் மொபைல் போன்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் அவசர தொலைபேசி இலக்கங்களான பொலிஸ் நிலையத்துக்கு 100 மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு 101 ஆகியவற்றைப் பயன்படுத்துவதோடு, அவசரநிலைகள் ஏற்பட்டால் உதவிக்கு தூதரகத்தின் 24 மணி நேர ஹாட்லைனை (+94718447305) தொடர்பு கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.









