165 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கை ரயில்வேயில் பெண்களுக்கு அதிகம் வேலைவாய்ப்பு!

17 hours ago

இலங்கை ரயில்வே திணைக்களத்தின்165 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, பல முக்கிய பதவிகளுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதிக்கும் கொள்கை முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுவரை, ரயில்வே எஞ்சின் சாரதிகள், ரயில் கட்டுப்பாட்டாளர் மற்றும் நிலைய மேலாளர் போன்ற பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே தகுதியுடையவர்களாக இருந்தனர். 

2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரை ரயில்வே மேற்பார்வை மேலாளர் பதவிக்கு பெண்கள் முதன்முதலில் சேர்க்கப்பட்டனர்.

அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட இந்தப் புதிய முடிவு, பாரம்பரியமாக ஆண்கள் வகிக்கும் பொதுத்துறைப் பணிகளில் பெண்களுக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

திணைக்களத்தின் தற்போதைய விதிமுறைகளில் பெண் ஆட்சேர்ப்புக்கான ஏற்பாடுகள் இல்லாததால், அரசியலமைப்பின் 55 வது பிரிவின் துணைப் பிரிவு (1) இன் கீழ் அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம், ரயில்வே எஞ்சின் சாரதிகள், ரயில்வே கண்காணிப்பாளர், நிலைய அதிபர் மற்றும் ரயில்வே மேற்பார்வை மேலாளர் பதவிகளுக்கு பெண்கள் இப்போது தகுதி பெறுவார்கள்.